புதுடெல்லி: விமான நிலையங்களில் ‘உதான் யாத்ரி கஃபே’ என்னும் மலிவு விலை உணவகங்களைத் தொடங்குகிறது இந்திய அரசு.
முன்னோடித் திட்டமாக, கோல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனைத்துலக விமான நிலையத்தில் உணவகம் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த உணவங்களில் தண்ணீர் போத்தல்கள், தேநீர், காபி, தின்பண்டங்கள் ஆகியவை நியாயமான விலையில் விற்கப்படும்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்கள் அவை எம்.பி. ராகவ் சதா, விமான நிலையங்களில் தண்ணீர், தேநீர், சிற்றுண்டிகளின் விலை மிக அதிக அளவில் இருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சு பதில் அளித்தது.
மக்களுக்கு நியாயமான விலையில் வசதிகளை வழங்குவதன் மூலம், அதிகரித்து வரும் செலவுகள், நெரிசலான விமான நிலையங்களுக்கு மத்தியில் விமானப் பயணத்தை எளிமையாக்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா கூறினார்.