சென்னை: அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன்(76) உடல் நலக்குறைவால் இன்று (புதன்கிழமை) காலை காலமானார்.
அதிமுகவில் 1977ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பசாமி பாண்டியன், 1980ஆம் ஆண்டு தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996ல் கருப்பசாமி பாண்டியனுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
2000ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன், 2006 பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2015 மே மாதம் திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கருப்பசாமி பாண்டியன், சிறிது காலம் அமைதியாக இருந்து வந்த நிலையில், 2016 ஜூலை 26ஆம் தேதி ஜெயலலிதாவால் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு 2017ல் அதிமுகவில் இருந்து விலகியவர், 2020ல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.