புதுடெல்லி: டெல்லியில் இருந்து பேங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த பயணி மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்தச் சம்பவம் புதன்கிழமை (ஏப்ரல் 9) நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்தது.
டெல்லியில் இருந்து பேங்காக் சென்ற விமானத்தில் பயணம் செய்த துஷார், 24, என்பவர் விமானத்திற்குள் மது அருந்தினார்.
சிறுநீர் கழிக்க இருக்கையில் இருந்து அவர் எழ முயன்றார். ஆனால், அதிகமாகக் குடித்ததால் அவரால் எழுந்திருக்க இயலவில்லை.
அதனால் நின்றவாறே, அருகில் அமர்ந்திருந்த பயணிமீது சிறுநீர் கழித்தார். அந்தச் சம்பவம் பற்றி உடனடியாக விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிறுநீர் கழித்த துஷாரை விமானப் பணிப்பெண்கள் எச்சரித்து அமைதியாக அமர வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பயணி ஜப்பானைச் சேர்ந்த அனைத்துலக நிறுவனம் ஒன்றின் அதிகாரி என்று கூறப்பட்டது. அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டது.
இருப்பினும், பேங்காக்கில் விமானம் தரை இறங்கியதும் தமக்கு ஏற்பட்ட நிலைகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, துஷார் அடுத்த 30 நாள்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது போன்று ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.
இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் இருந்த ஒரு பயணி, வயதான பெண் பயணிமீது சிறுநீர் கழித்தார்.
பின்னர், 2023ஆம் ஆண்டு ஆர்யா வோரா என்ற மாணவர் அமெரிக்க விமானத்தில் சக பயணிமீது சிறுநீர் கழித்தார். அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.