புதுடெல்லி: இந்தியாவில் உள்நாட்டு, அனைத்துலக விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துப் பொது இயக்குநரகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2025 ஜூலை மாதத்தில் 2.55 கோடி மக்கள் விமானப் பயணம் மேற்கொண்ட நிலையில், 2026 ஜூலை மாதத்தில் இது 4.5 விழுக்காடு குறைந்து, 2.43 கோடியாகச் சரிந்துள்ளது.
உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 4.74 விழுக்காடும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 4.59 விழுக்காடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூலையில் 66.3 லட்சம் பேர் வெளிநாடு சென்ற நிலையில், இவ்வாண்டு 63.3 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் இந்நிலை நீடிக்கிறது. குறிப்பாக, சென்னையில் விமானப் பயணிகள் போக்குவரத்து 14 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த ஜூலையில் 11.63 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 13.54 லட்சமாக இருந்தது. மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
இருப்பினும், நாட்டின் பிற நகரங்களில் வீழ்ச்சி பதிவான போதிலும், டெல்லியில் மட்டும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2026ன் முதல் ஏழு மாதங்களில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 984.03 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 0.64 விழுக்காடு மட்டுமே கூடுதலாகும்.


