மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று வானில் பூநாரைகள் மீது மோதியது. இருப்பினும், அது பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக வனவிலங்கு நிபுணர்களும், ஊடகவியலாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் பறவைகளில் குறைந்தது 36 கொல்லப்பட்டதாக ‘தி இந்துஸ்தான் டைம்ஸ்’ தகவல் தெரிவித்தது. இருப்பினும், மேலும் பல மாண்டிருக்கலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இளஞ்சிவப்பு நிறத்திலான பறவைகளின் உடல்கள் வானிலிருந்து விழுவதாக மே 20ஆம் தேதி மாலையில் மும்பையில் தளம் கொண்ட வனவிலங்கு நல அமைப்புக்குச் சில அழைப்புகள் வந்ததாக அதைச் சேர்ந்த பவன் ஷர்மா கூறினார்.
அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023ஆம் ஆண்டு அக்டோபர் வரை, விமானங்கள் பறவைகளை மோதிய 600க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவானதாக மும்பை விமான நிலையம் கூறியது.
இருப்பினும், ஒரு சம்பவத்தில் இத்தனை பூநாரைகள் கொல்லப்பட்டிருப்பது வழக்கமல்ல என்றார் திரு ஷர்மா.
இந்தச் சம்பவத்தை மதிப்பிடுவது முக்கியம் என்றும், இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

