ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஒரு நீரூற்றைப் புதுப்பிக்கும் பணியின்போது மிகத் தொன்மையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தெற்கு காஷ்மீரில் ஐஸ்முகத்தின் சாலியா பகுதியில் உள்ள கர்கோட் நாக் எனும் இடத்தில் சிலைகளும், சிவலிங்கமும் இன்னும் சில பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதி காஷ்மீர் பண்டிதர்கள் சமூகத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கி.பி. 625 முதல் கி.பி. 855வரை காஷ்மீரை ஆண்ட கர்கோடா வம்சத்துடன் தொடர்புடையது என்றும் நம்பப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவித்தன.
அகழாய்வுப் பணியின்போது சிலைகளை ஊழியர்கள் மீட்டதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் தொல்லியல். ஆவணக்காப்பகம், அரும்பொருளகத் துறையின் அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டதாகவும், சிலைகள் ஸ்ரீநகருக்கு அனுப்பப்பட்டு அவற்றின் காலம், மூலத்தைக் கண்டறிய சோதனைக்கு அனுப்பப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“அந்தப் பகுதியில் கார்கோடா வம்சத்தின் தாக்கம் இருந்துள்ளது. எனவே ஒரு கோயில் இருந்திருக்கலாம் அல்லது யாராவது அவற்றை பாதுகாப்புக்காக அங்கு வைத்திருக்கலாம்,” என்று காஷ்மீர் பண்டிதர் ஒருவர் கூறியுள்ளார்.