அமராவதி: பணி நேரத்தை பத்து மணி நேரமாக உயர்த்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மாநில வளர்ச்சித் திட்டங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஊழியர்கள், முதலீட்டாளர்களின் நலன் கருதி, இனி அதிகபட்ச வேலை நேரத்தை பத்து மணிநேரமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, தொழிலாளர் சட்டத்தில் உரிய மாற்றங்களைச் செய்ய இருப்பதாக மாநில தகவல், மக்கள் தொடர்பு அமைச்சர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
இதன் மூலம் ஆந்திராவுக்கு அதிக முதலீடுகள் கிடைக்கும் என்றும் மாநிலந்தோறும் உலகமயமாக்கல் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், உலகளாவிய விதிகளைச் செயல்படுத்த சட்டத்திருத்தங்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இரவு நேர வேலை விதிகளை அரசு தளர்த்தியுள்ளதால் பெண்கள் பாதுகாப்பாகப் பணியாற்ற முடிகிறது. இதன் மூலம் போக்குவரத்து வசதி, கண்காணிப்பு போன்ற பாதுகாப்புகளுடன் இனி பெண்கள் வேலை பார்க்கலாம்,” என்றார் பார்த்தசாரதி.
ஆந்திராவில் கூகல் அலுவலகம்
இதனிடையே, கூகல் நிறுவனம் ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் அலுவலகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத் தலைநகரான அமராவதியில் உள்ள அனந்தவரம் - நெக்கல்லுச் சாலையில் கூகல் அலுவலகம் அமையும் என்றும் விமான, ரயில் நிலையங்கள் அருகே இருப்பதால் இந்த இடத்துக்கு கூகல் நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.