அசாம் வெள்ளம்: உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு, 16 மாவட்டங்கள் பாதிப்பு

அசாம் வெள்ளம்: உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு, 16 மாவட்டங்கள் பாதிப்பு

2 mins read
b2510134-22f7-42c7-a839-e5f0a84ed1f0
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிட்டத்தட்ட 400,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 794 சிற்றூர்கள் நீரில் மூழ்கியுள்ளன. - படம்: இந்தியா டுடே

திஸ்பூர்: அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 400,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

“அசாமின் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்ததுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,” என்று மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏராளமான சிற்றூர்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல சிற்றூர்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், அவை வெளித் தொடர்பின்றி தனித்து விடப்பட்டுள்ளன. ஏராளமான விவசாய நிலங்களில் அறுவடையாகவிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

794 சிற்றூர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 19 ஹெக்டர் பயிர் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கினால் சுமார் 3.89 லட்சம் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுதும் பாதிக்கப்பட்டோரை மீட்புப் பணி நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப்பொருள்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள நேமதிகாட் என்னுமிடத்தில் பிரம்மபுத்திரா நதி அபாய அளவைத் தாண்டிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

செனிமாரி (கோவாங்) பகுதியில் உள்ள புர்ஹிதிஹிங், நங்லாமுராகாட் பகுதியில் உள்ள திசாங், நுமாலிகரில் உள்ள தன்சிரி (தெற்கு), சிவசாகரில் உள்ள திக்கோ ஆகிய ஆறுகளும் அபாய அளவைத் தாண்டி உள்ளன.

மாவட்ட நிர்வாகங்கள் 101 நிவாரண முகாம்களையும் நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் நிலையங்களையும் அமைத்துள்ளன. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 45,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். .

இந்திய ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை, துணை ராணுவப் படைகள், தீயணைப்பு, அவசரகாலச் சேவைகள் மற்றும் குடிமைப் பாதுகாப்புக் குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரால் 29 சாலைகள் சேதமடைந்தன. இதற்கிடையில், அசாம் அமைச்சர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்தும், நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டும் வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்