புதுடெல்லி: நான்கு இந்தியர்களுடன் சென்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரேன் இந்தியத் தூதரகம் உறுதிசெய்துள்ளது.
உக்ரேனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் ‘எம்ஜி ஏஜிஎன் ராக்னர்’ என்ற கப்பல் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த நான்கு இந்தியர்களில், இருவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துள்ள இந்தியத் தூதரகம், மேலும் இருவரைப் பற்றிய தகவல்களுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் நிலைமையைத் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனுக்குப் பயணம் மேற்கொள்வதை, அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கவனத்தில்கொண்டு இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அந்த வட்டாரத்தில் உள்ள கப்பல்களில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

