புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டதையடுத்து இன்று (ஏப்ரல் 27) என்ஐஏ விசாரணையை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த புதன்கிழமை முதல் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொண்ட குழு, ஆதாரங்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியதுடன் நேரில் பார்த்த சாட்சிகளிடம் நுணுக்கமான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நாட்டை உலுக்கிய இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிவதற்காக, தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

