சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது ஏற்படும் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கினால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சூழலில், மண்டி மாவட்டம், துனாக் கிராமத்திலுள்ள இமாச்சலப் பிரதேசம் கூட்டுறவு வங்கிக் கிளையானது மழைநீரில் மூழ்கியுள்ளது. சகதியும் குப்பைக் கூளங்களும் வங்கிக் கிளை முழுவதும் தேங்கிக் கிடக்கின்றன.
இதையடுத்து, இந்த வங்கியில் வைப்புத் தொகையாகப் போடப்பட்டிருந்த கோடிக்கணக்கிலான ரொக்கப் பணமும் தங்க, வைர நகைகளும் என்ன நிலையில் இருக்கும் என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த வங்கி அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் முதல் மாடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.
வெள்ளத்தின் காரணமாக வங்கிக் கிளையின் முகப்பிலிருந்த மூன்று கதவுகளும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதனால் வங்கி முழுவதும் நீர் நிரம்பி காணப்படுவதால், வங்கியில் எந்த அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உள்ளூர் வியாபாரியான ஹரி மோகன் என்பவர் கூறும்போது, “இந்த வங்கிக் கிளையில் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் துனாக் டவுன் பகுதியில் வசிக்கும் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கணக்கு வைத்துள்ளனர்.
“நாங்கள் அனைவருமே இந்த ஒரேயொரு வங்கிக் கிளையை நம்பித்தான் தினந்தோறும் எங்களது பணத்தை வங்கியில் போடுவதும் எடுப்பதுமாக இருந்து வருகிறோம்.
“வெள்ள பாதிப்பு காரணமாக வங்கியில் இருந்த ரொக்கமும் நகைகளும் என்னவாயின என்பது குறித்து பெரும் கவலையாக உள்ளது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இமாச்சலில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதிவரை இங்கு 23 முறை வெள்ளப்பெருக்கும் 19 முறை மேகவெடிப்பு மழையும் 16 முறை நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.