பெங்களூரு: பெங்களூரு மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ரூ.23.61 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரு பெண்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது பல்வேறு மாநிலங்கள், நாடுகளுடன் தொடர்புடைய சங்கிலித்தொடர் போன்ற கட்டமைப்பு என்று பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கூரியர் மூலம் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் போதைப்பொருளை வரவழைத்து, பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக நகரம் முழுவதும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 5.91 கிலோ ‘எம்டிஎம்ஏ’, 21.82 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா, 1.51 கிலோ ‘கோக்கைன்’ உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் வெளிநாட்டினர். அவர்களில் இருவர் பெண்கள். ஐவர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். இருவர் உள்ளூர்வாசிகள். கைதானவர்களிடமிருந்து மூன்று கார்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒன்பது கைப்பேசிகள், ரூ.50,500, 28 கிராம் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தக் கும்பல் நன்கு திட்டமிட்டு, பல அடுக்குகளாகப் பிரிந்து சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்ததாகக் காவல்துறை கூறியது. நகரின் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

