பெங்களூரு: ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எழுவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த அணியின் வெற்றியைக் கொண்டாடுவதற்காகக் கர்நாடக மாநில முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் தலைமையில் சின்னசாமி விளையாடரங்கில் பாராட்டு விழா நடந்தது.
கர்நாடகச் சட்டப்பேரவையிலிருந்து சின்னசாமி விளையாட்டரங்கம் வரை அணிவகுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரு அணியின் ரசிகர்கள் பலர் விளையாட்டரங்கிற்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் அவர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.
பெங்களூரு அணிக்காக விளையாடிய விளையாட்டாளர்களைப் பார்ப்பதற்காக மரங்கள், உயரமான சுவர்கள், கட்டடங்கள் மீதெல்லாம் ரசிகர்கள் ஏறியதாகக் கூறப்பட்டது. இதையடுத்துக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

