பாட்னா: கல்வி நிலையம் சார்ந்த வழக்கில் உலகின் முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரரான அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியும் இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானும் நேரில் முன்னிலையாக வேண்டுமென இந்தியாவின் பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்தக் கல்வி நிலையத்தின் விளம்பரத் தூதர்களாக மெஸ்ஸியும் ஷாருக்கும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தக் கல்வி நிலையம் தொடர்பில் முகம்மது ஷம்ஷத் அகமது என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இதுபற்றி அகமதின் வழக்கறிஞர் எஸ்.கே. ஜா கூறுகையில், “அகமதின் இரு மகன்களும் அக்கல்வி நிலையத்தில் சேர்ந்தனர். அங்கு பயின்ற காலத்திற்கான கல்விக் கட்டணத்தை அவர்கள் செலுத்திவிட்டனர். மனநிறைவு தருவதாக இல்லாததால் இருவரும் அக்கல்வி நிலையத்திலிருந்து விலகிவிட்டனர். ஆயினும், வெவ்வேறு பிரிவுகளின்கீழ் அவர்களுக்குக் கடன் வழங்கியதாகவும் அதனைத் திருப்பிச் செலுத்துமாறும் அக்கல்வி நிலையம் அகமதைக் கேட்டுக்கொண்டது,” என்று விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, 2023 அக்டோபர் 30ஆம் தேதி அகமது அக்கல்வி நிலையத்திற்கு எதிராக மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.
விசாரணையின்போது, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், விளம்பரத் தூதர்களான மெஸ்ஸி, ஷாருக் உள்ளிட்ட எழுவருக்கு ஆணைய அமர்வு அறிக்கை அனுப்பியது. அவர்கள் 2024 ஜனவரி 12ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டுமென அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஷாருக் மற்றும் மெஸ்ஸியின் வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர். ஆயினும், வழக்கின் உண்மையான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யத் தவறினர்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த ஆணைய அமர்வு, அன்றைய நாளில் மெஸ்ஸியும் ஷாருக்கும் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பித்தது.