புதுடெல்லி: இதுவரை வெளியிடப்படாத நூலில் உள்ள தகவலை மேற்கோள் காட்டி, நாடாளுமன்றத்தில் பேசிய ராகுலுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது அவை விதிகளுக்கு எதிரானது எனத் தற்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி, இந்திய-சீன எல்லையில் உள்ள பாங்காங் ஏரிப் பகுதியில் இருதரப்புக்கும் இடையே மோதல் மூண்டு வன்முறையில் முடிந்தது. இதனால் கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் நரவனே எழுதியுள்ள ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ என்ற அவரது சுயசரிதை நூலில் இந்தச் சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்தப் புத்தகம் குறித்து முன்னணி அச்சு ஊடகத்தில் ஒரு கட்டுரை வெளியானது.
அதன் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு, மக்களவையில் ராகுல் காந்தி பேச முற்பட்டபோது, அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.
அப்போது, “அந்தப் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது. அது ஏன் இவர்களை (பாஜக) இந்த அளவுக்கு அச்சமூட்டுகிறது?” என்று கேள்வி எழுப்பினார் ராகுல்.
தொடர்புடைய செய்திகள்
“அவர்களுக்குப் பயம் இல்லையென்றால், நான் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட வேண்டும். தாம் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் 100% உண்மையானவை,” என்றார் ராகுல் காந்தி.

