டொரான்டோ: இந்தியாவின் அதிகரித்து வரும் திரவ இயற்கை எரிவாயுத் (எல்என்ஜி) தேவைக்குக் கைகொடுக்கத் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
“வரும் 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிவாயுத் தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி வல்லரசு என்ற முறையில் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய கனடா தயாராக உள்ளது,” என்று திரு மார்க் கார்னி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகக் குறைந்த கரிம வெளியேற்றம் கொண்டதும் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) வழங்க கனடா தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசியா, ஐரோப்பா முழுவதும் திரவ இயற்கை எரிவாயு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
போர்ச்சூழல், கத்தாரின் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளதால், அதன் விலை உயர்ந்திருப்பதுடன், விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வரும் 2030ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்கவும், நாட்டின் முதன்மை எரிசக்தி தேவையில் எல்என்ஜி-யின் பங்கை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்குக் கனடா உறுதுணையாக இருக்கும்.
உற்பத்தி, தூய்மையான தொழில்நுட்பம், அணுசக்தித் திட்டம் போன்றவற்றுக்காக இந்தியா முக்கியமான தாதுப் பொருள்களைத் தேடும் வேளையில், கனடா சிறந்த பங்காளித்துவ நாடாக அமையும். உலகில் உள்ள சுரங்க நிறுவனங்களில் 40 விழுக்காடு கனடாவில் உள்ளன என்று திரு மார்க் கார்னி தெரிவித்தார்.
கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி அல்லது யுரேனியம் என கனடா எதை வழங்கினாலும் வாங்க இந்தியா தயாராக இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.

