14 சிறுவர்களின் பார்வையைப் பறித்த ‘கார்பைடு துப்பாக்கி’

2 mins read
தீபாவளி நேரத்தில் வினையாக முடிந்த விளையாட்டு
ef6f967d-5f5f-4738-acee-37772dd150f0
மத்தியப் பிரதேசத்தில் மூன்று நாள்களில் 122க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். - படங்கள்: என்டிடிவி

போபால்: இந்தியாவில் ஒவ்வொரு தீபாவளியின்போதும் பட்டாசுகளில் புதிதாக ஓர் அம்சம் அறிமுகம் காண்பதுண்டு.

இந்த ஆண்டு அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது ‘கார்பைடு துப்பாக்கி’. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடிக்கும் துப்பாக்கி அது.

ஆனால், ஒளியைக் கொண்டாடும் நாளில் பல சிறுவர்களின் விழியைப் பாதித்து பார்வையைப் பறித்துள்ளது இந்த ‘கார்பைடு துப்பாக்கி’.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 122க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் பார்வையை இழந்துவிட்டனர்.

அக்டோபர் 18ஆம் தேதி, அரசாங்கம் இந்தப் பொருளை விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. இருப்பினும், பொம்மைகளைப்போல் தோற்றமளிக்கும் இந்த விளையாட்டுத் துப்பாக்கிகள் சில கடைகளில் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு துப்பாக்கியின் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை என்று தகவல்கள் கூறுகின்றன. பிள்ளைகள் பயன்படுத்தியபோது அவை வெடிகுண்டைப்போல் வெடித்தது, பார்வையைப் பறித்ததாகத் தெரிகிறது.

சட்டவிரோதமாக இவற்றை விற்பனை செய்ததன் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் போன்ற நகரங்களின் மருத்துவமனைகளில் கண் சிகிச்சைக்கான பகுதிகள், இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறு பிள்ளைகளால் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் சிலர் சமூக ஊடகக் காணொளிகளைப் பார்த்துத் தாங்களே ‘கார்பைடு துப்பாக்கியை’ உருவாக்கியதாகக் கூறினர்.

இந்தக் கருவி கண்களை நேரடியாகப் பாதிப்பதாகவும் இது வெடிக்கும்போது வெளியாகும் உலோகத் துண்டுகளும் கார்பைடு வாயுவும் விழித்திரையில் நிரந்தர பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்ஸ்டகிராம், யூடியூப் தளங்களில் வெளியான காணொளிகள் வெகுவாகப் பரவியதை அடுத்து இளையர்கள் பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்