புதுடெல்லி: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் ஏறக்குறைய ஆறு மணிநேரம் விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் நேரில் முன்னிலையானார். அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
கரூர் துயரத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்று தவெக தரப்பில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் திடீரென ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைந்ததற்கு செந்தில் பாலாஜியின் தரப்பினரே காரணம் என தவெகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 15, 16ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரிக்கப்பட்டார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியும் 17ஆம் தேதி முன்னிலையாகி உள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியுடன் செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றதாக சிபிஐ தெரிவித்தது.
அவர் மீண்டும் விசாரிக்கப்படுவாரா அல்லது கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை முழுமையாக நிறைவு பெற்றதா என்பது தெரியவில்லை.

