குப்பம்: பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனது குப்பம் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அத்தொகுதி முழுவதும் சாலைகள் அமைத்து அனைவருக்கும் குடிநீர், மின்சாரம், வீடு, வேலை வழங்குவதே தமது லட்சியம் எனக் குறிப்பிட்டார்.
“ஆந்திராவில் நாம் தண்ணீருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறோம். வரும் ஜூன் மாதத்திற்குள் ஹந்திரி-நீவா குடிநீர்த் திட்டப் பணிகளை நிறைவு செய்து, அதன் மூலம் கிருஷ்ணா நதிநீரை குப்பத்துக்கு கொண்டு வருவோம்.
“இதேபோன்று கோதாவரி நீரையும் இங்கு கொண்டு வருவோம். பாலாற்றின் மீது மீண்டும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர முதல்வரின் இந்தத் திட்டவட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.