ஹைதராபாத்: பாரத் ராஷ்டி சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சரும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஹரிஷ் ராவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை கவிதா முன்வைத்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியுமான சந்தோஷ் குமாரும் தனது தந்தைக்கு எதிராக செயல்படுவதாக கவிதா தெரிவித்திருந்தார்.
ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் சந்திரசேகர ராவும் ஒருவர். 2001ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைத் துவங்கிய அவர், தெலுங்கானா உருவானதும், முதல்வராக 2014ல் பதவியேற்று, 2023 வரை பதவியில் நீடித்தார். தேசிய அரசியல் ஆசை ஏற்பட கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி எனப் பெயர் மாற்றினார். அவருக்கு கேடி ராமாராவ் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். மகன் எம்எல்ஏ ஆக உள்ளார். மகள் எம்எல்சி ஆக உள்ளார்.
மாநிலத்தில் ஆட்சி பறிபோன பிறகு கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. சந்திரசேகர ராவ் - அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் பேச்சுகள் கிளம்பின.
இச்சூழ்நிலையில், கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேசத் துவங்கினார். கட்சியின் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்குக் கட்சித் தலைவர் ஹரிஸ் ராவ்தான் காரணம் என்றார். இந்நிலையில், கவிதாவை பிஆர்எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து அவரது தந்தையும் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.