புதுடெல்லி: இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்குப் பெயர்சூட்ட சீனா தொடர்ந்து வீணான, அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதை உன்னிப்பாக கவனிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, இத்தகைய முயற்சிகளைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது.
பெயரை மாற்றினாலும் உண்மையான எதார்த்தத்தை சீனா மாற்ற முடியாது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களின் பெயர்களை மாற்ற சீனா அவ்வப்போது மேற்கொள்ளும் முயற்சிகளை இந்திய வெளியுறவு அமைச்சு கண்டித்து வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்துக்கு ஜாங்னான் என்று சீன மொழியில் பெயரிட்டுள்ளது சீனா. அதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு 15 இடங்களுக்கும் 2023ல் 11 இடங்களுக்கும் சீன மொழியில் பெயர் சூட்டியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் கடும் விமர்சனத்துக்கு இடையே, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் அந்நாடு பெயர் சூட்டியுள்ளது.

