புதுடெல்லி: இந்தியாவில் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது 4.1 கோடி இந்திய சிறார்களுக்கு உடல் பருமன் பிரச்சினை இருப்பது கவலைக்குரியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறார்கள் முதல் பதின்ம வயதினர் வரை ஏறக்குறைய 4.1 கோடி பேர் அதிக உடல் எடையுடன் உள்ளனர். இவர்களில் 1.4 கோடி பேர் மிக அதிக உடல் பருமன் பாதிப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 1975ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, உடல் பருமனால் பாதிக்கப்பட்ட இந்திய சிறார்கள் எண்ணிக்கை 4%ஆக மட்டுமே இருந்தது. தற்போது அது ஏறக்குறைய 20 விழுக்காட்டை நெருங்கிவிட்டது. அந்த வகையில் உடல் பருமன் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே, முதல் முறையாக உடல் எடை குறைந்த சிறுவர்களைவிட, உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் பரவலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் ஏற்கெனவே சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உடல் பருமன் பிரச்சினையும் சேர்ந்துள்ளது.
இது வெறும் அழகு சார்ந்த பிரச்சினை மட்டுமன்று என்று எய்ம்ஸ் மருத்துவர் ராஜேஷ் கட்காவத் தெரிவித்துள்ளார். நீரிழிவு, இதய நோய், பிற வாழ்வியல் பிரச்சினைகள் போன்ற நீண்டகால அபாயங்களைக் கொண்ட சிக்கல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பல நாடுகள் இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பிரச்சினையின் தன்மை, வேகத்திற்கு ஏற்ப தீர்வுகள் எட்டப்படவில்லை என்பதே உண்மை என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


