அருணாசலப் பிரதேசம்: இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்திற்கு அருகிலுள்ள திபெத்திய பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் நீராற்றல் திட்டத்தை அமைக்கும் பணியைச் சீனா, சனிக்கிழமையன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
திட்டம், 167.8 பில்லியன் வெள்ளி பெருமானமுள்ளது.
நியிங்சீ நகரில் நடந்தேறிய இதற்கான நில அகழ்வு விழாவின் தொடக்கத்தில் சீனப் பிரதமர் லீ சியாங் திட்டத்தை அறிவித்தார். சீனாவில் பிரம்மபுத்திரா நதியின்பெயர் யார்லூங் ஸாங்போ.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் பெற்ற இந்தத் திட்டம், உலகின் ஆகப் பெரிய உள்ளமைப்பு மேம்பாட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது.
அருவிகளின் நீராற்றலைப் பயன்படுத்தும் ஐந்து மின்னாற்றல் நிலையங்கள் கொண்டுள்ள இந்தத் திட்டத்திற்கு 1.2 ட்ரில்லியன் யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை இந்த ஆலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
அருணாசலப் பிரதேசத்திற்குள் ஓடுவதற்கு முன்னர், யூ வளைவாக ஓடும் பள்ளத்தாக்கு உள்ள ஓர் இடத்தில் இந்த நீராற்றல் நிலையம் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டம் குறித்து இந்திய, பங்ளாதேஷ் தரப்புகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தின.
இந்திய, சீன எல்லைப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்த இடம், சர்ச்சைக்குரியது. நிலநடுக்க அதிர்வுகள் அதிகம் உணரக்கூடிய இடமாகவும் அது உள்ளது.
இந்தப் பெருந்திட்டம், எந்நேரமும் வெடிக்கும் நீர்க்குண்டு போன்றது என்று அருணாசலப் பிரதேசத்தின் முதல்வர் பிரேமா காண்டு தெரிவித்தார்.
உள்ளூர் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய திட்டமான அது, ராணுவ நடவடிக்கையை காட்டிலும் பெரும் கவலையை அளிக்கிறது, என்றும் திரு காண்டு கூறினார்.
அருணாசலப் பிரதேசத்திலும் இந்தியா, தனது சொந்தமான பிரம்மபுத்ரா நீராற்றல் திட்டத்தை உருவாக்க முற்படுகிறது.