தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூட்டானையும் ஆக்கிரமிக்கும் சீனா

2 mins read
ea518c29-0580-4932-8b1c-86823f96021b
பூட்டானில் சீனா குறைந்தது 22 கிராமங்களை உருவாக்கியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

பூட்டான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி 22 கிராமங்களில் சீன ராணுவம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பூட்டானின் மேற்குப் பகுதியான டோக்லாமில் கடந்த எட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 22 கிராமங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியது மூலம் சீனா தனது எல்லையை வலுப்படுத்தியுள்ளது.

டோக்லாமில் கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது, இந்திய ராணுவம் தலையிட்டு கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. ஏறக்குறைய 73 நாள்கள் மோதலுக்குப் பிறகு இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெறப்பட்டன.

தற்போது பூடானின் டோக்லா எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் துணை ராணுவப் படை, அந்நாட்டுப் படையுடன் இணைந்து பாதுகாத்து வருகின்றது.

ஆனால், டோக்லா பகுதிகளில் உள்ள 22 கிராமங்களை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இதில், எட்டுக் கிராமங்களை சீனப் படைகள் நிர்வகித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரதான நிலப்பரப்பை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி பகுதி அருகேவுள்ள பூடான் எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்தியுள்ளது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த ஆக்கிரமிப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் காவல் பணி, படை விலக்கல் தொடா்பாக நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சிக்கலை முடிவுக்குக் கொண்டுவர சீனா-இந்தியா இடையே கடந்த அக்டோபரில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. தொடர்ந்து, படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு சுமூக உறவு நீடித்து வருகின்றது.

தொடர்ச்சியாக இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் சீனாவில் புதன்கிழமை நடைபெறும் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்கும் நிலையில், பூடான் எல்லைப் பிரச்சினை வெடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்