புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதாகப் பரவிய தகவலை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது முற்றிலும் பொய்யான தகவல் என இந்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
சீன ராணுவம் இந்தியக் கிராமத்தைக் கைப்பற்றிவிட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவ்வாறு எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேச எல்லையில், சீன ராணுவத்தினர் ஏறக்குறைய 60 கிலோ மீட்டர் தூரம் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியதாகத் தகவல் வெளியானது.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மோடி அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்றார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட சில நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோருகிறது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பங்ளாதேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட, ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத புகைப்படங்களைப் பயன்படுத்தி, சீன ராணுவம் அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளதாகக் கூறுவதும் சரியல்ல என்று திரு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
இதுபோன்ற தவறான தகவல்கள் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும் என்றும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எழுப்பியுள்ள கவலைகள் நியாயமானவை என்றார் அவர்.
அதேநேரம், சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகத் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கார்கே குற்றச்சாட்டு
இந்நிலையில், வழக்கம்போல் ஊடுருவல் குறித்த தகவல்கள் தவறானவை என்று இந்திய அரசு மறுத்துள்ளது என்று திரு கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய ராணுவம் தனது கடமையைச் சிறப்பாகச் செய்துவரும் நிலையில், சீனாவுடனான எல்லை தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவான தகவல்களை வழங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.


