புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (cockroach janata party) அனைத்து சமூக ஊடகப் பக்கங்களும் அதன் இணையத்தளமும் முடக்கப்பட்டுள்ள நிலையில், தங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுவதாக அபிஜித் தீப்கே சாடியுள்ளார்.
அக்கட்சியின் இன்ஸ்டகிராம் பக்கம் இணைய ஊடுருவல்காரர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது என்றும் எக்ஸ் தளத்தைத் தவிர அக்கட்சியின் அனைத்து சமூக ஊடகப் பக்கங்களுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இளையர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) தொடங்கப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே லட்சக்கணக்கானோர் சிஜேபி கட்சியின் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பின்தொடர்ந்தனர்.
இந்நிலையில், சிஜேபியின் சமூக ஊடகப் பக்கங்களில் மர்ம நபர்கள் ஊடுருவி அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, சிஜேபியைத் தோற்றுவித்த அபிஜித், தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பது சர்வாதிகார நடவடிக்கை என்றார்.
இந்திய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. காக்ரோச் ஜனதா கட்சியின் எந்தவொரு சமூக வலைதளக் கணக்கும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றில் வெளியாகும் எந்தப் பதிவுகளையும் நம்ப வேண்டாம். கரப்பான்பூச்சிகள் சாகாது. நாங்கள் புதிய வடிவில் மீண்டு வருவோம்,” என்று அபிஜித் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

