கொச்சி: கேரள மாநிலம் பாலக்காடு-சொரனூர் இடையே மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை (ஜூலை 23) சொரனூரில் இருந்து பாலக்காடு நோக்கி ஒற்றப்பாலம் - லக்கிடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை ரயில் கடந்தபோது, தண்டவாளத்தில் ஒருவிதச் சத்தம் கேட்டுள்ளது. இதனால் ரயில் ஓட்டுநருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் அவர் தண்டவாளத்தில் பார்த்தபோது, அங்குச் சுருள் வடிவிலான இரும்புக் கம்பிகள் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதிர்ஷ்டவசமாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஒற்றப்பாலம் - லக்கிடி இடையே உள்ள தண்டவாளத்தில் குறிப்பிட்ட பகுதியில் இரும்புக் கம்பிகள் வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் ஐந்து இடங்களில் அவை வைக்கப்பட்டு இருந்தன.
குறிப்பாக மாயனூர் பாலத்தின் அருகே இரும்புக் கம்பிகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அதனை ரயில்வே காவல்துறையினர் அகற்றினர்.
ரயிலைக் கவிழ்க்க நடத்தப்பட்ட சதித் திட்டமா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ரயில் தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகளை வைத்தது யார் என்பது குறித்துக் கண்காணிப்பு கருவியுள்ள பதிவுகள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஒற்றப்பாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மேலும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.