புதுடெல்லி: இனி உரிமம் பெற்ற மருந்தகங்களில் மட்டுமே குழந்தைகளுக்கான இருமல் மருந்து விற்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கலப்பட இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் இறந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி இந்தியக் கிராமப்புறங்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் நேரடியாக மருந்துச்சீட்டு இல்லாமல் இருமல் மருந்து உள்ளிட்ட சிலவற்றை வாங்க முடியாது.
இது தொடர்பாக கடந்த 1945ஆம் ஆண்டு மருந்து (5வது திருத்த) விதிகளில் திருத்தம் செய்து இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, இதற்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டு பொது மக்களின் கருத்து கேட்கப்பட்டது.
அதையடுத்து, இருமல் மருந்து உள்ளிட்ட சில திரவ மருந்துகள் கடுமையான மருந்துவகை ஒழுங்குமுறை பட்டியலின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்ட ஆப்பிரிக்கா, மத்திய ஆசியாவைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 2025 அக்டோபர் மாதம், ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து, 24 குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

