காதல் ஜோடியைக் கலப்பையில் பூட்டி துன்புறுத்தல்

1 mins read
6a1115da-4936-445b-b763-300c764bc483
காதல் திருமணம் செய்த இளம் ஜோடியைச் சிலர் மாடுகளைப் போலக் கலப்பையில் கட்டி வைத்து வயலை உழ வைத்துத் துன்புறுத்தியுள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

ஒடிசா: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடியைச் சிலர் மாடுகளைப் போலக் கலப்பையில் கட்டி வைத்து வயலை உழ வைத்துத் துன்புறுத்தியுள்ளனர்.

கஞ்சமாஜிரா கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம் ஜோடி அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டது.

இருப்பினும், அந்தத் திருமணத்தைச் சில கிராமவாசிகள் எதிர்த்தனர்.

தங்கள் சமூக வழக்கப்படி இது பொருந்தா திருமணம் எனக் கூறிய கிராமவாசிகள் சிலர் அந்தத் தம்பதியைக் கலப்பையில் பூட்டி உழச்செய்ததோடு, பிரம்பால் தாக்கவும் செய்துள்ளனர்.

பின்னர், கோவிலுக்கு அழைத்துச் சென்று பரிகாரப் பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளம் தம்பதி கலப்பையில் பூட்டப்படும் காணொளி வெளியான நிலையில், பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதோடு, இத்தகைய பழமைவாத நடவடிக்கைகளைக் களையக் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராயகடா மாவட்டத்தில் வசிக்கும் பெண் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டநிலையில், பாவப் பூஜை என்ற பெயரில் சடங்கைச் செய்து அப்பெண்ணின் தலையை மொட்டையடித்து துன்புறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்