ஆந்திராவில் பரவும் கொவிட் தொற்று: உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு

ஆந்திராவில் பரவும் கொவிட் தொற்று: உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு

1 mins read
02148ebb-7848-4c59-86a4-33fce529fb8b
ஆந்திராவின் ஒங்கோல் பகுதியில் உள்ள அரசுப் பொது மருத்துவமனையில் கொவிட்-19 பரிசோதனைக்காக தனி வார்டு தயார்நிலையில் உள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்றுப்பாதிப்பு பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

ஆந்திராவில் ‘கொவிட்-19’ தொற்றுக்கு இதுவரை நான்கு பேர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடப்பா மாவட்டத்தில்தான் மீண்டும் தொற்றுப்பரவல் தோன்றியதாக ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விசாகப்பட்டினம், காக்கிநாடா என மாநிலம் முழுவதும் தற்போது 22க்கும் மேற்பட்டோர் தொற்றுப் பாதிப்புக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடப்பா மாவட்டத்தில் மட்டும் எட்டுப் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை (ஜூலை 20) ஓங்கோல் பகுதியில் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

ஓங்கோலில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு மருத்துவர்களும் உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தொற்றுப்பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் விழிப்புடன் செயல்பட்டால் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

தொற்றுப்பரவலையடுத்து, ஆந்திர மாநிலச் சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ், மூத்த சுகாதார அதிகாரிகளுடன் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்