புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2023 ஜனவரி முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இணைய மோசடி மூலம் ரூ.10,188 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இணைய மோசடிக் கும்பல்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து 10,000 கோடி ரூபாயை இணைய மோசடி மூலம் பறித்துள்ளதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஓர் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
இந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இந்திய இளையர்கள் பலர் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
பின்னர், அவர்களின் கடப்பிதழ்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் ‘இணைய அடிமை’களாக நடத்தப்படுவதாகவும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு சிக்கும் இளையர்கள் பலர் பெருந்தொகையைப் பிணையாக கொடுத்த பிறகே விடுவிக்கப்படுகிறார்கள் என்றும் பல்வேறு மாநிலங்களிடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு சைபர் அடிமைகளாக உள்ள 1,285 பேரை மீட்கும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தமிழக காவல்துறை மேலும் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து இணைய மோசடிக் கும்பல்களுக்கு சட்டவிரோதமாக ஆள்களைத் தேர்வு செய்து அனுப்பும் தரகர்கள் அடையாளம் காணப்பட்டு காவல்துறை கைது செய்து வருகிறது.