புனே: புனே நகரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தாயார், பூட்டிய வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீல் அங்கோலா. 1989ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 20 அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
இவர், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்.
இந்நிலையில் சலீல் அங்கோலாவின் தாயார் மாலா அசோக் அங்கோலா, 77, மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) இவரின் வீட்டுக்கு பணிப்பெண் வழக்கம்போல் வந்துள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் மாலா திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்ததாக தினமலர் தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
வீட்டில் மாலா அசோக் அங்கோலா, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரின் கைகளிலும் காயம் இருந்தது. சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அண்மைக்காலமாக அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.