சென்னை: பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் தொடர்பில், சென்னை ஐஐடி அறக்கட்டளையுடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுடன் ராணுவத் தொழில்நுட்பங்களில் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இலக்கு.
இதன் தொடர்பில், சென்னை ‘ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜிஸ்’ அறக்கட்டளையும் இந்திய ராணுவத்தின் மின்னணுவியல், இயந்திரப் பொறியியல் பிரிவும் வியாழக்கிழமை (மார்ச் 26) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.
பிரவர்தக் அறக்கட்டளையின் தலைமைச் செயலாக்க அதிகாரி எம்.ஜெ.ஷங்கர் ராமன், இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் லலித் கபூர் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, ஆவடியில் ஆய்வு, கண்டுபிடிப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் குறித்துக் கூறிய மேஜர் ஜெனரல் லலித் கபூர், “ஐஐடி பிரவர்தக் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ராணுவ நடவடிக்கைகளையும் ஆயுதங்களின் தரத்தையும் மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். இதன்மூலம், பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் போக்கைக் கணிசமாகக் குறைக்க முடியும்,” என்றார்.
ஐஐடி பிரவர்தக் அறக்கட்டளையின் உத்திபூர்வ ஆலோசகரும் தென்மண்டல ராணுவத்தின் முன்னாள் உயரதிகாரியுமான லெப்டினென்ட் ஜெனரல் கரன் சிங் பிரார், “இந்தக் கூட்டு முயற்சி மூலம் ஐஐடி கல்வி நிறுவனம், ராணுவம் என இருதரப்புகளின் திறமைகளை ஒருசேரப் பயன்படுத்த முடியும்,’’ என்றார்.

