புதுடெல்லி: கடன் வாங்கியவர்களை மிரட்டும் வகையில் வங்கி முகவர்கள் நடந்து கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடன் வாங்கியவர்களைத் திட்டுவது, சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை தருவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய விதிமுறைகளையும் அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவோர் அதற்குரிய தவணை தொகையை செலுத்தத் தவறினால் வங்கி முகவர்களால் அச்சுறுத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, இத்தகைய அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில் சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடன் நிலுவையை வசூலிப்பது வங்கியின் உரிமையாக இருந்தாலும், அது வாடிக்கையாளரின் தனிப்பட்ட சுதந்திரம், கண்ணியம், தனி உரிமையைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என ரிசர்வ் வங்கி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் வசூல் முகவர்களுக்கான இந்த ஒருங்கிணைந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, வங்கி வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவோ அல்லது நேரில் சென்று சந்திக்கவோ முடியும்.


