ஸ்ரீநகர்: பள்ளிவாசல் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் ஏலம் விடப்பட்ட கோழி முட்டையை 226,350 ரூபாய்க்கு (S$3,700) ஏலம் போனதாக அவ்வழிபாட்டுத் தல நிர்வாகக் குழு தெரிவித்தது.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம், மல்போர் எனும் சிற்றூரில் அந்த ஏலம் இடம்பெற்றது.
தன் வீட்டுக் கோழி போட்ட அம்முட்டையை ஏலத்திற்குக் கொடுத்ததாகப் பெயர் வெளியிட விரும்பாத மூதாட்டி ஒருவர் கூறினார்.
மூன்று நாள்களாக, பல சுற்றுகளாக நடந்த ஏலத்தின் முடிவில் அம்முட்டையை அதிகப் பணம் கொடுத்து ஒருவர் வாங்கினார். பின்னர், மேலும் நன்கொடை திரட்ட ஏதுவாக அதனை அவர் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவிடமே கொடுத்துவிட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் சொன்னார்.
ஏலத்தின் இறுதி நாளில் டேனிஷ் அகமது எனும் இளம் தொழிலதிபர் ரூ.70,000 கொடுத்து அந்த முட்டையை வாங்கிக்கொண்டார்.
அண்டையிலுள்ள வர்போரா பகுதியைச் சேர்ந்த அகமது, “எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பள்ளிவாசலைக் கட்டி முடிக்க ஆர்வமாக இருக்கிறோம். பள்ளிவாசலைப் பெரிதாகக் கட்டத் திட்டமிட்டுள்ளதால் நிதியும் அதிகம் தேவைப்படுகிறது,” என்று சொன்னார்.
பல கட்ட ஏலத்திற்குப் பிறகு அம்முட்டை மூலம் ரூ.226,350 நிதி திரட்டப்பட்டது.