மும்பை: காவல்துறையினர்போல் நடித்து, தூதஞ்சல் நிறுவன காரை வழிமறித்து, ரூ.5.4 கோடியைக் (S$873,300) கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
தானே மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்ட அக்கொள்ளை தொடர்பில் வழக்கு பதிந்து, எட்டுப் பேர் கொண்ட கும்பலைக் காவல்துறை தேடி வருகிறது.
இம்மாதம் 14ஆம் தேதி இரவு ஜல்கானிலிருந்து மும்பை நோக்கி அவ்வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, இன்னோவா காரில் வந்த எட்டுப் பேர் அடங்கிய கும்பல் அதனை வழிமறித்தது.
அந்த வாகனத்தைச் சோதனையிடுவதுபோல் நாடகமாடிய போலிக் காவலர்கள், அதனுள் இரண்டு சாக்குப்பைகளில் இருந்த ரூ.5.4 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அக்கொள்ளை தொடர்பில் மார்ச் 17ஆம் தேதியன்று காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து, அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை அந்தக் கொள்ளைக் கும்பல்மீது வழக்கு பதிந்துள்ளது.