சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டில் மின்கருவி உற்பத்தி ஆலை ஒன்று அமைக்கப்படுகிறது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனமும் தமிழக அரசும் கையெழுத்திட்டன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ரூ.700 கோடி முதலீட்டில் ஆலை கட்டப்படுகிறது. இதன்மூலம் ஏறத்தாழ 1,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜப்பானைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான ஹிகோகி ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500க்கும் மேற்பட்ட விநியோகிப்பாளர்கள், 100க்கும் மேற்பட்ட சேவை மையங்களுடன் விரிவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது,” என அரசு கூறியது.

