சென்னை: இந்தியா, பிரிட்டன் இடையேயான விரிவான பொருளியல், வர்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (ஜூலை 15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், அன்றைய தினம் சென்னையில் இருந்து ரூ.4.29 கோடி மதிப்பிலான முதலாவது ஏற்றுமதித் தொகுப்புகள் அனுப்பிவைக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தமிழகம், கேரளத்திற்கான பிரிட்டன் துணைத்தூதர் சுதபா சௌத்திரி கலந்துகொண்டு ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார்.
முதலாவது தொகுப்பில் வாகன உதிரி பாகங்கள், தங்க ஆபரணங்கள், அரிசி, சிறுதானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஆகியவை அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இவற்றை அனுப்பியுள்ளன. மேலும் வேளாண்-பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக, மதிப்பு கூட்டப்பட்ட 50 மெட்ரிக் டன் வேளாண், பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

