கைப்பேசிச் செயலி வழியாக ஆதார் கார்டு திருத்தம் செய்யும் வசதி அறிமுகம்

2 mins read
ae391308-f18d-44d0-a618-468026a71171
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ள புதிய ‘ஈ-ஆதார்’ செயலி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்தியக் குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை இனி எளிதாகத் திருத்த முடியும்.

இந்தியாவில் ஆதார் அட்டை தவிர்க்க முடியாத ஆவணமாக உள்ளது. கைப்பேசிக்கான ‘சிம்’ அட்டை வாங்குவது முதல் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வரை பல்வேறு சேவைகளுக்கு 12 இலக்க ஆதார் எண் கேட்கப்படுகிறது.

ஆதார் அட்டையில் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறு ஏற்பட்டால், மக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று திருத்தம் செய்ய வேண்டிய முறை தற்போது நடப்பில் உள்ளது. இதனால் நேர விரயம், தேவையற்ற தாமதம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்தச் சிக்கலைத் தீர்க்க ஆதார் ஆணையம் புதிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, ஆதாரை மின்னிலக்க மயமாக்கும் முயற்சியாக ‘ஈ-ஆதார்’ (e-Aadhaar App) எனப்படும் புதிய செயலி அறிமுகமாகவுள்ளது.

இந்தச் செயலி மூலம், ஆதார் தொடர்பான தகவல்களை மக்கள் தாங்களே திருத்த முடியும். குறிப்பாகப் பிறந்த தேதி, பெயர், பெயர்களில் எழுத்துப்பிழை, முகவரி, கைப்பேசி எண் போன்ற முக்கிய விவரங்களை இனி ஆதார் மையத்திற்குச் செல்லாமல் கைப்பேசி மூலமாகவே புதுப்பிக்க முடியும்.

புதிய ‘ஈ-ஆதார்’ செயலியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முகஅடையாளம் மற்றும் கைரேகை வழியாக பயனாளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.

இதனால் தரவுப் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும். போலி ஆதார் மோசடிகள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வசதி அறிமுகம் ஆகுமெனத் தெரிகிறது. ‘பயோமெட்ரிக் அப்டேட்’ தவிர ஏனைய திருத்தங்களை இந்தக் கைப்பேசிச் செயலி வழியாகவே செய்யமுடியும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்