மும்பை: பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அவர் காலமானதாகவும் அவரது இறுதிச்சடங்கு திங்கட்கிழமை நடைபெறும் என்றும் குடும்பத்தார் தெரிவித்தனர்.
காலஞ்சென்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியான ஆஷா போஸ்லேவும் இசைத்துறையில் கோலோச்சினார்.
ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி எனப் பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மகிழ்வித்த ஆஷா போஸ்லேவுக்கு இந்திய அரசு கடந்த 2000ஆம் ஆண்டில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் ஆகப்பெரிய ‘தாதா சாகேப் பால்வே’ விருதை வழங்கிச் சிறப்பித்தது.
மேலும், கடந்த 2008ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் அவர் பெற்றிருந்தார்.
தமிழில் ‘செண்பகமே செண்பகமே’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘செப்டம்பர் மாதம்’ (அலைபாயுதே), ‘கொஞ்ச நேரம்’ (சந்திரமுகி), ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ (ஹே ராம்) உள்ளிட்ட பல பாடல்களை அவர் பாடியுள்ளார்.
கடந்த 1933ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்த ஆஷா, பல்வேறு மொழிகளில் ஏறக்குறைய 12,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியில் பாடிய, காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார் ஆஷா.
காதல் பாடல்கள், கஜல், துள்ளல் பாடல்கள் என பல்வேறு மெல்லிசைப் பாடல்களை வழங்கியுள்ள அவர், பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் மனைவியாவார்.
மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற வகையில், கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார் ஆஷா போஸ்லே.
ஆஷா போஸ்லே மறைவுக்கு இந்தித் திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

