ஹைதராபாத்: வெளிநாட்டுச் சிறையில் 18 ஆண்டுகளைக் கழித்த பிறகு நாடு திரும்பிய ஐந்து இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரைக் கண்டு ஏக்கம் தீர்த்த தருணம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.டி. ராமராவின் முயற்சியால் இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம், ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த சிவராத்திரி மல்லேஷ், சிவராத்திரி ரவி, சிவராத்திரி அனுமந்து, கொல்லம் நம்பள்ளி, துண்டுகுலா லட்சுமண் ஆகிய ஐவரும் 2005ஆம் ஆண்டு துபாயில் வேலை செய்து வந்தனர்.
அப்போது, அங்கு காவலாளியாக வேலைசெய்து வந்த நேப்பாள ஆடவர் ஒருவரை அவர்கள் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துபாயில் சட்ட உதவி பெறுவதில் அவர்களுக்கு மொழி ஒரு பெரும்பிரச்சினையாக இருந்து வந்தது. மேல்முறையீடு செய்தும் தண்டனை குறைக்கப்படவில்லை. பொது மன்னிப்புக் கோரிக்கையையும் துபாய் நீதிமன்றம் ஏற்காததால் அவர்களது சிறைவாசம் தொடர்ந்தது.
இந்நிலையில், துபாய் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டதால் அவர்களுக்குக் கதவு திறந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.டி. ராமராவ், இந்திய வெளியுறவு அமைச்சின் உதவியுடன் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தோமைச் சந்தித்தார். அப்போது, நெடுங்காலமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து இந்தியர்களுக்கும் பொது மன்னிப்பு அளித்து, விடுதலை செய்யும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.
அதன் விளைவாக, அந்த ஐவரின் கருணை மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல வாரங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சிறையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அந்த ஐவரும் பல்லாண்டுகளுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆனந்தக் கண்ணீர் உகுத்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.