கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்பட்ட கஸிரங்கா தேசிய பூங்காவின் 150க்கும் மேற்பட்ட விலங்குகளில், அரிய ஒற்றைக் கொம்புடைய ஒன்பது காண்டாமிருகங்களும் அடங்கும்.
கடந்த இரண்டு மாதங்களாக கனமழை காரணத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளச் சம்பவங்களில் சிக்கித் தவிக்கிறது அசாம்.
பண்ணைகளையும் குடியிருப்புப் பகுதிகளையும் நீரில் மூழ்கடித்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ள நிலையில் குறைந்தது 79 பேர் வெள்ளத்தால் உயிரிழந்து விட்டனர்.
அசாம் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி, ஜூலை 9ஆம் தேதி தொடங்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது.
கஸிரங்கா தேசிய பூங்காவின் வன முகாம்களில் மூன்றில் ஒரு பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகங்கள் சுமார் 4,000 இருக்கும் நிலையில், கஸிரங்கா தேசிய பூங்காவில் இருப்பவை அதில் பாதியாகும்.
இதற்கிடையே, அடுத்த இரண்டிலிருந்து மூன்று நாள்களுக்கு வட, வடகிழக்கு மாநிலங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது நிலைமையை மேலும் மோசமாக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அசாமில் உள்ள ஒன்பது ஆறுகளில் ஆபத்தான அளவில் நீர்மட்டம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள பல ஆறுகள் கரைபுரண்டு ஓடும் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.