ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் மேலவை உறுப்பினருமான முகமது அசாருதீன், தெலுங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.
நவம்பர் 11 அன்று ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.
தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு முறையும் ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த வாய்ப்பை யாருக்கு வழங்கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை. மேலும், அந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது. அதனால், அசாருதீனை அமைச்சரவையில் சேர்க்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை (31 அக்டோபர்) அன்று அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


