லக்னோ: காசி நகரை மாற்றி அமைக்கும் வகையில், ரூ.25,000 கோடி செலவில் கங்கை, வருணா வழித்தடங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் வாரணாசிக்கான போக்குவரத்து வசதி பேரளவு மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருணா நதிக்கரையோரம் செயல்படுத்தப்பட உள்ள சாலைத் திட்டத்தின் மதிப்பு ரூ.10,998 கோடியாகும். அதேபோல் கங்கை நதிக்கரையோரம் ரூ.14,448 கோடி செலவில் ஆறு வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வாரணாசிக்கு வரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆண்டுதோறும் வாரணாசிக்கு 15 கோடி சுற்றுலாப் பயணிகளும் புனிதப்பயணம் மேற்கொள்வோரும் வருகைதருகின்றனர். எனவே, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது.
தேசிய நெடுஞ்சாலை, வாரணாசி சுற்றுச்சாலையுடன் இணைக்கப்படும் என்றும் பயண நேரம் 60 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்களாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டைத் திட்டங்கள் சுற்றுலா, நகர்ப்புற வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


