போபால்: குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற மத்தியப்பிரதேச மாநில அரசு அதிகாரியான அமிதா சிங் தோமர் ரூ. 2.5 கோடி நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவாலியரைச் சேர்ந்த அமிதா சிங் தோமர், நடிகர் அமிதாப்பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 2019ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் பரிசு வென்று, இந்தியா முழுவதும் பிரபலமானார்.
மத்தியப்பிரதேச மாநில அரசில் தாசில்தாராக பணியாற்றி வரும் இவரைக் காவல்துறையினர் மார்ச் 26ஆம் தேதி கைது செய்தனர்.
2021ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு அரசு வழங்கிய வெள்ள நிவாரண நிதியை பரோடா பகுதியில் விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
2.5 கோடி ரூபாய் பணம் போலியான வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பரோடா காவல்துறை அதிகாரிகள் அமிதா சிங் தோமரை அவரது வீட்டில் கைது செய்தனர்.
அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமிதா சிங் தாசில்தார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் அர்பித் வர்மா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

