புதுடெல்லி: உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும் இது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றிய அவர், உலக நாடுகளில் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த மாத இறுதியில் பிஜியில் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் கடந்த 80 ஆண்டுகளில் பிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் அம்மொழியைக் கற்பிப்பது இதுவே முதல் முறை என்றும் பிரதமர் மோடி கூறினார்.
“பிஜி நாட்டு மாணவர்கள் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
“கலை முதல் ஆயுர்வேதம் வரையிலும் மொழியில் இருந்து இசை வரையிலும் உலகில் முத்திரை பதிக்க இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன,” என்றார் பிரதமர் மோடி.
இந்திய கலாசாரம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருவதாகவும் சில வாரங்களுக்கு முன் எகிப்தில் இருந்து 23,000 மாணவர்கள் இந்திய கலாசாரம் தொடர்பான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.