தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2 mins read
0a98a73d-17fa-49cb-82e9-a08eadda7e4b
இந்த வார தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாக இருந்தது. - கோப்புப் படம்

புதுடெல்லி: கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கி உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் இயல்பை விட வெயில் அதிகமாக இருந்ததாக அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

1901ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே போன்று வெயில் கொளுத்தியது. 124 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் பிப்ரவரியில் வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் சராசரியாக 22.04 டிகிரி வெயில் பதிவானது. இது இயல்பை விட 1.34 டிகிரி வெயில் அதிகமாகும். கொங்கன் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதி மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் அதிக வெப்பம் பதிவானது.

இங்கு இயல்பை விட 4ல் இருந்து 8 டிகிரி வரை அதிக வெயில் இருந்தது. இந்த வாரத் தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 38 டிகிரி வெயில் அடித்தது.

இந்த ஆண்டை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென் மேற்கு இந்திய பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட வெப்ப அலை அதிகமாக வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், கோவா உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இயல்பை விட அதிக வெயில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் மாத இறுதியில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் அறுவடை நடைபெறும். இந்த ஆண்டு வெயில் அதிகரிக்கும் என்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே, கோதுமை உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருவதால் அதன் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்