ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக, 794 இடங்களில் 1,039 கிலோ மீட்டர் தூரம் வரை சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கன மழையால் இதுவரை 2 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் பல கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் லாரிகள், கொள்கலன் வாகனங்கள், பெட்ரோல், டீசல் டேங்கர்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கன மழையால் ரயில் சேவை பாதிப்புக்குள்ளானது. தென் மத்திய ரயில்வே மண்டலம், பல ரயில்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பல ரயில்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
கனமழையால் நெல், பருத்தி, வாழை, தக்காளி, மிளகாய், மஞ்சள் ஆகிய பயிர்கள் மூழ்கி விட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவித்தது.
பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டதால் அங்குள்ள மக்களுக்கு அரசு தரப்பில் ‘டிரோன்’கள் மூலம் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துகள் ஆகியவை வழங்கப்படும் நிலையில், பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா, கோதாவரி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் பல ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பியதால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.