புவனேஸ்வர்: அதிவிரைவு ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் காயமடைந்தனர். இந்தத் துயரச் சம்பவம் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.
அங்கு பெங்களூரு-காமக்யா விரைவு ரயில் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக மாவட்ட ஆட்சியர் பாவுசாஹேப் ஹிண்டே அறிவித்தார். மேலும், காயமடைந்த 8 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாகவும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள் ரயில் விபத்தில் காயமடைந்ததாகக் தெரிவித்தார்.
விபத்தின்போது அந்த விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன.
காலை 11.54 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
விசாரணைக்குப் பிறகுதான் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும் என்றும் அக்குறிப்பிட்ட பாதையில் காத்திருக்கும் ரயில்களை திருப்பி விடுவதற்கும் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கிழக்கு கடற்கரை ரயில்வேயின் அதிகாரி அசோக் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
“எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, விபத்து நிவாரண ரயில், அவசரகால மருத்துவக் கருவிகள் விபத்துப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகள் விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்வர்,” என்றும் அவர் கூறினார்.

