புதுடெல்லி: இந்தியாவின் வடமாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தலைநகர் புதுடெல்லியில் இந்த ஆண்டின் ஆக அதிகமான வெப்பநிலை பதிவானது.
சனிக்கிழமை (ஏப்ரல் 25) பதிவான 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக, டெல்லிவாழ் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் கடும் வெயிலுக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லியில் 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதன் பின்னர் சனிக்கிழமைதான் கிட்டத்தட்ட அதற்கு இணையான வெப்பம் நிலவியது.
எனினும், எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை கோடை மழையை எதிர்பார்க்கலாம் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பு டெல்லி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இயல்பைவிட 5.1 டிகிரி அதிக வெப்பம் பதிவானதாகவும் இதன் காரணமாக வெப்ப அலை ஆபத்து நிலவுவதாகவும் அந்த மையம் தெரிவித்தது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடப்பாண்டின் முதல் வெப்ப அலை நிலவியதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
எனினும், கடந்த வியாழக்கிழமையன்றே ஹரியானா, டெல்லியில் வெப்ப அலை வீசத் தொடங்கிவிட்டது என்றும் சனிக்கிழமை டெல்லியில் மூன்றாவது நாளாக வெப்ப அலை காணப்பட்டது என்றும் வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தி உள்ளது.

